செப்டம்பர் 28, 2018

அந்தி...

தெளிந்த ஓடையில்/
கால் நனைக்காமல்.../
ஆழமுறும் அந்தி

நவம்பர் 22, 2017

கற்புத் தாழ்பாள் - கஸல்

இறைவா!
உன்னைக் கண்டபின்
கற்புத் தாழ்பாளை
கனமாய்ப் போட்டிருந்தும்
அவள்

ஒரு எளிய புன்னகையினாலேயே
திறந்து விட்டாளே?

எந்தத் 
தேவதையின் பிரார்த்தனை
உன்னை
என்னிடமிருந்து பிரித்திருக்கும்


சாமியின் 
பாதத்தில் விழுவதுபோல்
உன் காலில் விழுகிறேன்
வா

நவம்பர் 17, 2017

முத்தத்தின் ருசி - கஸல்

உன் பார்வை
செல்லும் இடமெல்லாம்
முத்தத்தின் ருசி

கருவறை போல
எப்போதும்
மறைத்துதான்
வெளிப்படுத்துகிறாய்

கர்ப்ப கிரகத்திலேயே
இருக்கும்
பூசாரிக்கு
அருள் கிடைக்காதது போல
உன் காதலும்

கிடைக்காமல் போனது

செப்டம்பர் 26, 2017

குளத்தில் ஒரு நிலா - ஹைக்கூ விளக்கம்

தளும்பும் குளம்
தவிக்கும் மனம்
தள்ளாடும் நிலா
-செல்லம்பாலா @ தி.ஞானபாலன்

சிறு விளக்கம் இதற்கு. பூக்களால் நிரம்பியிருக்கிறது குளம். அதைப் பறிக்கத் துடிக்கிறது மனம் - காதலிக்குத் தரவா? கடவுளுக்குச் சூட்டவா என்றுதான் தெரியவில்லை. தள்ளாடும் நிலா. அப்படியென்றால் இரவில் பூப் பறிக்க சென்றிருக்கிறார். இரவில் அந்தக் குளத்தருகில் என்ன வேலை. சங்க இலக்கியம் சொல்லவது போல இரவுக்குறியாக இருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் அதிகப்படியாக சொல்ல வேண்டும் என்றால் காமம் தீர்ந்தபின் அந்த பெண் தள்ளாடியும் சென்றிருக்கக்கூடும்... இன்னும் சொல்லலாம் ஆனா மாட்டேன்... 

செப்டம்பர் 18, 2017

"ஹைக்கூ உலகம்" - நூல் வெளியீட்டு விழா அழைப்பு



ஓவியா பதிப்பகம் வெளியீட்டில்...
முனைவர் ம. ரமேஷ் தொகுத்த..
"ஹைக்கூ உலகம்" ஹைக்கூ நூல் வெளியீட்டு விழாவுக்கு 
உங்களை அன்புடன் அழைக்கின்றோம்

01-10-2017 ஞாயிறு அன்று மாலை 4 மணி அளவில்..
சென்னை எழும்பூர் இக்‌ஷா அரங்கில்...

"இனிய உதயம்" இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் தலைமையில்,
திரைப்பட இயக்குநர் அகத்தியன் அவர்கள் வெளியிட...
முதல் நூலினை திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி அவர்கள் பெறுகிறார்..

அனைவரும் வருகை தந்து சிறப்பு செய்ய அன்புடன் அழைக்கின்றோம்..

ஆகஸ்ட் 31, 2017

ஹைக்கூ உலகம் - தொகுப்பு நூல்

சென்னையில் அக்டோபர் 1 ல் வெளியீடு... வாருங்கள் சிறப்பிக்க... 
இது ஹைக்கூ உலகம்… 
உலகம் இணையத்தால் சுருங்கிவிட்டது. கவிதை வடிவங்களும்; ஆம் இது ஹைக்கூ உலகம். இலக்கிய வடிவங்கள் பலவற்றுள் காலத்தால் முந்தியது கவிதையே ஆகும். கருத்திற்கேற்பத் தமிழ் இலக்கியங்கள் சங்க காலம் முதல் இக்காலம்வரை பல மாற்றங்களுடன் வளர்ச்சிப் பெற்று வந்துள்ளன. மேனாட்டார் வருகையால் ஏற்பட்ட உரைநடைத் தாக்கமும், கல்வி பயில்வோர் பலதரப்பட்டவர்களாக அமைந்தமையும், மனப்பாடத்தின் தேவையின்மையும், அச்சு நூல்கள் மற்றும் இதழ்களின் வளர்ச்சியும், சமுதாய மாற்றமும் புதுக்கவிதை என்னும் யாப்பு கடந்த கவிதை வகைத் தோன்றிச் சிறக்கக் காரணமாயின. அவ்வாறான வளர்ச்சியில் இன்று ஹைக்கூ வடிவமும் முக்கிய இடத்தைப் பெற்றுவிட்டது. இன்று கவிதை என்றால் அது புதுக்கவிதையைக் குறிப்பது போல, இன்னும் பத்தாண்டு கால இடைவெளியில் கவிதை என்றால் அது ஹைக்கூவை குறிக்கும் என்ற நிலையை எட்டிப் பிடிக்கும்.
தமிழ்க் கவிதை காலம்காலமாக இயற்கை, சமுதாயம், காதல், ஆன்மிகம் என்ற பாடுபொருள்கள் நான்கினை உள்ளடக்கியதாக இருந்து வருகின்றன. கவிஞர்கள் புதுக்கவிதையில் இந்த நான்கு பாடுபொருள்களைக் கொண்டே கவிதைகளைப் படைத்துள்ளார்கள். இந்தப் பிரிவுகள் தனித்தனி வகையாகப் பரிணமித்து இயற்கையை ஹைக்கூவிலும், காதல், ஆன்மிகத்தைக் கஸலிலும், சமுதாயத்தைச் சென்ரியுவிலும் தனித்தனி இலக்கிய வகைமையாக்கி கவிதைகள் புனைந்து வருவது இருபத்தோராம் நூற்றாண்டின் வளர்ச்சிப் போக்காக ஆய்வாளர்களால் அடையாளம் காண முடியும்.
இன்றைய தமிழ்க் கவிதைகளின் போக்கானது, சுருங்கச் சொல்லுதலை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுக்கவிதையில் பல அடிகளில் சொல்ல வேண்டிய கருத்தை ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, பழமொன்ரியு என்னும் கவிதைகளும் அதன் வகைமைகளும் மூன்றே அடிகளில் வெளிப்படுத்தி விடுகின்றன. அவ்வாறு சுருக்கமாக இயம்பினாலும் அக்கவிதைகளின் பொருளானது வாசகனின் மனநிலைக்கு ஏற்ற வகையில் விரிந்துச் சென்று பல பொருள்களைத் தருவதாக அமையும் சிறப்பினையும் பெற்றுத் திகழ்கின்றன என்பது இவ்வடிவங்களின் தனிச் சிறப்பாகிறது.
இன்று 350 க்கும் மேற்பட்ட ஹைக்கூ நூல்கள் வெளிவந்திருந்தபோதிலும் இன்னும் சரியான புரிதல் இல்லாமல் சென்ரியுவை ஹைக்கூக்கள் என்று எழுதி வருகின்றார்கள். தமிழில் தொடக்கக் கால ஹைக்கூக் கவிஞர்களின் கவிதைகள் ஹைக்கூக்களாக இருப்பதையும், அதைத் தொடர்ந்து எழுத வந்தவர்களின் ஹைக்கூத் தொகுப்பில் சென்ரியு தன்மையே ஹைக்கூக்களாக இருப்பதையும் அடையாளம் காண முடிந்தது. அதன் விளைவாகவே இன்று ஹைக்கூ என்ற பெயரில் மூன்று அடியில் எழுதப்படும் பல கவிதைகளும் வெறுமனே விடுகதைகளாக, உவமை, உருவகங்களாக, தன்மைப் பாங்குடன் அமைந்த நேரடித் தத்துவக் கருத்துகளாகவும் துணுக்குகளாகவும், காதல் கவிதைகளாகவும் அமைந்திருப்பதை அடையாளம் கண்டேன். 
ஹைக்கூவைத் தமிழுக்குக் கொண்டு வருகிறபோது எல்லா மரபுகளையும் தூக்கிக் கொண்டுவரவேண்டியதில்லை எனக் குறிப்பிடும் கவிக்கோ அப்துல் ரகுமான் கூட, ஹைக்கூவின் முதல் இரண்டு அடிகள் ஒருகூறு; ஈற்றடி ஒருகூறு. ஹைக்கூவின் அழகும், ஆற்றலும் ஈற்றடியில்தான் இருக்கிறது, அது ஒரு திடீர் வெளிப்பாட்டை உணர்த்தி - அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிப்படுத்தும். மற்றொரு மரபு, ஹைக்கூவின் மொழியமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்ற மொழி. தந்திமொழியைப் போல அவசியமற்ற இணைப்புச் சொற்களை அது விட்டுவிடும். உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்தும் என்று ஜப்பானிய ஹைக்கூவின் இரண்டு முக்கிய மரபுகளை மட்டும் குறிப்பிட்டாலும் பல ஹைக்கூக் கவிஞர்கள் இதனைப் பொருட்படுத்தவில்லை என்பதைக் காண முடிகின்றது. 
ஹைக்கூ சிற்றிதழ்கள், வார இதழ்களில் வரும் ஹைக்கூக் கவிதைகளை நானும் கல்லூரி காலக் கட்டங்களில் படித்து அதன் படியே ஹைக்கூ எழுதி வந்தவன்தான். என் ஹைக்கூக்களைப் புத்தகமாகத் தொகுக்கும்போதுதான் சென்ரியு என்ற வடிவம் இருக்கிறது என்பதை அறிந்து தெளிவு கொள்ள முடிந்தது. இதைத் தொடர்ந்த இணையத்தில் - குறிப்பாக முகநூலில் அடியெடுத்து வைத்தபோது, என்னைப் போன்றே பலரும் சென்ரியுவையே ஹைக்கூ என்று நம்பி எழுதி வந்ததை அறிந்தபோதுதான், முகநூலில் ஹைக்கூ உலகம் என்னும் குழுவை ஆரம்பித்து ஹைக்கூவின் உள்ளடக்கத்தையும் பாடுபொருளையும் பாடும் முறையைக் கற்பித்தும், சென்ரியு வடிவம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையும் பலருக்கும் தெரியப்படுத்திச் சென்ரியு தன்மையிலிருந்தும், விடுகதை அமைப்பிலிருந்தும், உவமை உருவம் மிகைப்படுத்தாமல் ஹைக்கூ எழுதும் முறைகளையும் கற்பிக்க நேர்ந்தது. 
மூன்று அடியில் எழுதப்படும் எவ்வகைப் பொருளும் ஹைக்கூ என்று சொல்வதை மூத்த ஹைக்கூக் கவிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஏற்காமல், இவை எல்லாம் ஹைக்கூ அல்ல என்று வருந்திய காலக் கட்டம் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முற்றிலும் மறையும். காரணம், இது வரையில் வந்த பல ஹைக்கூத் தொகுப்புகளில் சென்ரியுவும் கலந்து மயக்கம் தந்திருக்கலாம். இன்று ஹைக்கூ என்றும் சென்ரியு என்றும் அல்லது ஹைக்கூ தொகுப்பிலேயே ஒரு பகுதியாகச் சென்ரியு என்றும் தனித்தனியாகக் கவிதைகளைப் பிரித்துக்காட்டி வெளியிடும் சூழல் உண்டாகிவிட்டது என்பதால் இனி இது சாத்தியமான ஒன்றுதான்.
இன்று தமிழ் ஹைக்கூக் கவிஞர்கள் என்று இணையத்தில் ஏறக்குறைய ஆயிரம் பேர் வரையில் வேறு வேறு முகநூல் குழுமங்களிலும், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்ற வேறு பல இணையத் தொடர்புகளில் கவிதைகள் படைத்து வருகிறார்கள். இவர்கள் எல்லாரும் ஹைக்கூவைத் திறம்பட எழுத சிலர் முன்வந்து உதவுகிறார்கள். எழுதப்படும் ஹைக்கூக்களில் காணப்படும் குறைகளைச் சுட்டிக் காட்டினால் திருத்தத்தை ஏற்றுக்கொண்டு திருத்தம் செய்து செவ்வனே ஹைக்கூக்களைப் புனையும் திறம் பெற்றவர்களாகத் திகழ்கின்றார்கள். எனவே, இனி வரும் ஹைக்கூத் தொகுப்புகள் எல்லாமே உண்மையான ஹைக்கூ அல்லது சென்ரியு தொகுப்புகளாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்பதற்கான முதல் சான்றுதான் ‘ஹைக்கூ உலகம்’ என்னும் இந்தத் தொகுப்பு நூல்.
இத்தொகுப்பு நூலில் பதினொரு கவிஞர்களின் ஹைக்கூக்கள் இடம்பெற்றிருக்கிறது. ஹைக்கூவில், நாம் காட்டும் காட்சி அல்லது நிகழ்ச்சி இயற்கையைப் பற்றி, மனிதனைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி ஓர் அரிய உண்மையை உணர்த்துவதாக, வாசகன் உள்ளத்தில் ஒளியேற்றுவதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஹைக்கூ எழுத வேண்டிய அவசியமில்லை என்ற அப்துல் ரகுமான் அவர்களின் கருத்தை முன்நின்று ஏற்று, பருவ காலங்களின் பகுப்புகள் தொடங்கி உவமை, உருகம் மேலோங்காமல், தன்மைப் பாங்கும் உலகியலுக்கான பொதுமையாய் அமைய, இன்றைய சுற்றுச்சுழல், சமுதாயத் தாக்கத்தையும் இக்கவிஞர்கள் மனதில் நிறுத்தி, அவர்கள் கண்ட காட்சிகளையும் ஹைக்கூக்களாக வார்த்தெடுத்த பாங்கை உணர்ந்து, ஒவ்வொரு கவிஞர்களின் தனிச்சிறப்பான ஹைக்கூக்களையும், இத்தொகுப்பில் எந்த ஒரு கவிஞரின் ஒரு ஹைக்கூவும் சரியில்லை என்று ஒதுக்கி விட்டோ, பக்கங்களைப் புரட்டிவிட்டோ படிக்கத் தோன்றாதவாறான ஹைக்கூக்களே தொகுத்துக் கொடுத்துள்ளேன். 
இத் தொகுப்பு முயற்சிக்குக் காரணமாய் அமைந்த ஹைக்கூக் கவிஞர்களுக்கும், தொகுப்பு நூலினை வெளியிடும் ஓவியா பதிப்பகம் - வதிலைபிரபா அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. 
ம.ரமேஷ்


ஆகஸ்ட் 20, 2017

காவனூர் சீனிவாசன் - ஹைக்கூக்கள் விளக்கம்


மரமிருந்த இடம்
மனதுள்
சருகுகளும் ஓசைகளும்

வேரோடு பிடுங்கியெறிந்தது
மரமாகும் கனவை
ஒருசிறு செடி

ஒரு சிறு விளக்கம்:  

மரம் வளர்த்தலும் அழித்தல் பற்றிய பொருளில் சார்ந்தது இக்கவிதைகள்.
ஒரு புறம் மரக்கன்று நடுவதும் பிறிதொருபுறம் மரங்களை; வனத்தை அழித்தும் வருகிறோம்.
 
முதலாவது கவிதை:
மரமிருந்த இடம்
மனதுக்குள்
சருகுகளும் ஓசைகளும்.

- இது மேலோட்டமாகவே ஒரு புரிதலை நிகழ்த்தவல்லது. மிகச்சாதாரண போன்றும் தோன்றும். கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தால் காட்சி விரியும் கோணங்கள் புலப்படும். மரமிருந்த இடம்- நிலத்தில் இருந்து வேரோடு பிடுங்கப்பட்டு அகற்றியது இங்கு மறைமுகமாக சொல்லப்படுகிறது. அவ்இடத்தை கடக்கும் போது அம்மரம் வெட்டாமல் இருந்திருந்தால் அங்கு காற்றின் அசைவால் சருகுகள் சத்தமும் நமக்கு கேட்கும். அதிகம் என்று சொல்லும்போது அது விருட்சமாகவும் இருக்கலாம். ஓசைகளும் என்று குறிப்பிடும் போது பறவைகளின் சப்தமும் இதில் அடங்குகிறது. மரத்தை வெட்டியதால் முதல்வரி அதை குறியீடாக்கி மரமிருந்த இடம் எனச்சொல்லப்பட்டது. வெட்டி அகற்றப்பட்டு விட்டதால் அங்கு சருகுகளின் சப்தமும் பறவைகளின் ஒலிகளையும் இழந்து நிற்கிறோம். அனுபவித்து கடந்த இன்பம் மனதில் தேங்கி இருப்பதால் இல்லாத போது அது மனதுள் நீங்காமல் ஓசைகள் கேட்கிறதென்பது முதல் வாசிப்பில் புரிந்து கொள்ளலாம். இருந்தபோது மனதில் இடம்பிடித்தவைகள் காட்சியில் இல்லாதபோதும் மனதுள் அசைவது இரண்டாவது கோணம். மனதில் மரம் வளர்ப்போம் என்றில்லாமல் வனங்களை ஒருபுறம் அழித்துவருகிறோம். மனதில் இடம்பிடித்தமரங்கள் கூட நினைவில் இப்போது இல்லை. வெறும் சொல்லாகவே வெற்றாகவே ஆகிவிடுகிறது. மரம் வளர்க்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தஇடம் மனம்.
நிலமாகி கிடந்தமனம். வளர்க்க நினைவுகளற்று போனபின் மனதுள் சருகுகளும் ஓசைகளும் மட்டுமே. மனதில் வளர்க்கவேண்டும் எண்ணம் பிடுங்கியபின் அங்கு மனதுள் எஞ்சியிருப்பது சருகின் ஓசைகளும் பறவையின் ஒலிகளும் மட்டுமே. இது நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்பு மனங்களை மறைமுகமாக சுட்டும். மண் மணத்தோடு கிராமம்விட்டு நகர்ப்புறம் நகர்கிற மனங்களில் மரமிருந்த இடம் இப்போது வெறும் சருகுகளும் ஓசைகளும். மூன்றாவது கோணத்தில் ஓசைகள் என்பது அவன் மன ஓலங்களை, சொல்லமுடியா கையறு நிலையின் ஆதங்கமாகவும் எதிரொலிக்கும். வாசகர்கள் முதல் கவிதையை பல்வேறு காட்சிகளை மனதுள் நிறுத்தி சுவைபட சுவைக்கலாம்.

அடுத்தது இரண்டாவது கவிதை:
வேரோடு பிடுங்கியெறிந்தது
மரமாகும் கனவை
ஒரு செடி.

-இது சமுதாய அவலத்தை சுட்டி மறைமுகமாக வைத்து எழுதப்பட்டது. ஒரு முரண்சுவையும் இதில் வாசிக்கையில் ஈர்ப்பினை தரும். வழக்கமாக செடியை பிடுங்கி வேறோர் இடத்தில் நடுவோம்.ஆனால் இங்கு சிறுசெடி தான் மரமாகும் கனவை வேரோடு பிடுங்கியெறிகிறது. தான் மரமானால் வெட்டப்படுவோம் என்ற உணர்வை ;எண்ணும்படியான ஒரு ஆக்கம். ஒரு செடி மரமாகும் வரை பல தடைகள். வளர்ந்தபின்னும் அது வெட்டப்படும் சூழல்.முன்கூட்டியே ஒரு செடிக்கு அதன்நிலை உணர்த்தப்பட்டு இருப்பதால் தன்நிலை அறிந்த பக்குவம்பெற்ற அஃறிணை உயிரோட்டமான உயர்திணையாக மாற்றம்பெற்று மரமாகிற கனவை தவிர்க்கிறது. போராட்டங்களும் வன்மங்களும் பாலியல் கொடுமைகளும் சிறுவயதிலேயே எதிர்கொள்கிற சிறுவயது மனங்கள் பலத்தசேதாரம் அடைகிறது. மனச்சிதைவில் தன் எதிர்கால கனவுகளைமட்டுமல்ல தன்னையே பலிகொடுத்து கொள்கிறது. சிறுசெடிகளை சிறுவயதுள்ளவர்களோடும் பலன்தரக்கூடிய மரங்களை வெட்டி வீழ்த்துவதைப்போல சமூகச்சூழல் இவர்களின் கனவுகளையும் அழித்துப்போவதற்கு மனிதர்கள் பெரும்பாலும் காரணமாகின்றனர். இக்கருத்தை மையமாக வைத்து தான் இரண்டாவது கவிதை தோற்றம் கண்டது. மரம்வளர்த்தல் அவசியம். சிறுவயதிலேயே பிஞ்சுமனங்களை நல்ல எண்ணங்கள் அடையச்செய்யுமாறு வளர்த்தல் அவசியம். சிறுவயதிலேயே விரக்திஅடையும் நிலையை இச்சமூகம் சார்ந்து பல வன்முறைகள் நிகழ்வதை நாம் தடுக்கவேண்டும். மரம் வெட்டி வேரோடு பிடுங்குதல் தவறு. கலாச்சாரங்களை அழித்து நம் அடையாளங்களை இழப்பதும் தவறு. மரபை போற்றி காக்கவேண்டும்.
 இந்த அடிப்படையை மனதிற்குள் என்னால் இவ்வளவு தான் ஊன்றிச்செல்ல முடிகிறது. மனதுக்குள் துளிர்விட இதில் ஏராளமான கோணங்கள் காட்சிகள் நீங்கள் காணலாம். ஹைக்கூ கவிஞர்கள் தங்கள் கருத்துக்களையும் முன் வைக்கலாம்.

 -காவனூர்.சீனிவாசன்.

ஆகஸ்ட் 19, 2017

ஒளிப்பாளம் - ஹைக்கூக்கள்

ஒரு சிற்றாறு
மறைந்திருக்கப் பார்க்கிறேன்
மூடுபனியில்

நடமாடும் பாதத்தில்
தொடரும் அழகு
ஒரு ஒளிப்பாளம்

பள்ளத்தாக்கைக் கடக்க
கோயில் கோபுரம்
பனிபோர்த்திய மலை உச்சி

தோட்டத்தில் நான்கைந்து
கற்கள் அடுக்கி
ஏதுமற்று அமர்கிறேன்

மார்ச் 15, 2017

அதே இனிப்பு, பழம்

அதே இனிப்பு, பழத்துடன்
செல்கிறது...
எல்லா விருந்திலும் பாட்டி - ம.ரமேஷ்
சிறுவிளக்கம்: இரண்டாவது அடியில் செல்கிறார் அல்லது செல்லும் என்று உயர்திணையில் வருவதுதான் சிறப்பு. அது கருதினும் இவ்வாறு எடுத்துச் செல்லும் பாட்டி, தாத்தாக்களை நாம் போவுதுபாரு என்று பண்பாடின்றித்தான் சொல்கிறோம் என்பதால் எழுதப்பட்டது. “அதே” என்ற சொல் தேவைதான். விருந்து நிகழ்ச்சிகளில் வாழை, லட்டு அல்லது ஜாங்கிரி என்பனதான் வைக்கப்படுகிறது (கிராமமாக இருக்கலாம் எனவும் யுகிக்கலாம்). குழந்தைகள் இதனை சலிப்பின்றி சாப்பிடும்... என்பதால் பேரனுக்கோ பேத்திக்கோ இருவருக்குமோ எடுத்துச் செல்கிறார். அப்படியென்றால் அந்தப் பாட்டி வீட்டில்தான் இருக்கிறார்... “அதே இனிப்பு, பழத்துடன் / செல்கிறது..." என்பதால் சுப நிகழ்ச்சி ஏதேனும் தடைபட ஏற்றிக் கொண்டு வந்த வண்டி திரும்பவும் செல்கிறதா.... இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்....

மார்ச் 12, 2017

Kavanur Srinivasan - பாரியன்பன் - ஹைக்கூ விமர்சனம்

நன்றி - Kavanur Srinivasan - 
ஹைக்கூ கவிதைகள் முகநூலில் ஆர்வத்துடன் எழுத முயற்சிக்கின்றனர்.பலர் எழுதியும் வருகின்றனர். இக்கவிதைகளை பல குழுக்கள் வரவேற்று கவிஞர்களை ஊக்குவித்து வருவதும் வாசகர்கள் அறிந்தவொன்று.
ஹைக்கூ உலகம் - முனைவர் ம.ரமேஷ் அவர்களால் கவிஞர்களுக்கு பயிற்சிகொடுத்து இவ்வகைமைகளை இனங்காட்டி எழுதவைத்துக்கொண்டிருக்கிறது.
' ஒரு ஹைக்கூவும் ஒரு தேநீர் கோப்பையும் ' என இக்குழுமமும் நடத்திவருகிறது.
ஒரு நூறு கவிஞர்கள் இருக்கலாம்.இப்படி மூன்றுவரிகளில் மூழ்கி முத்தெடுத்து தந்துகொண்டிருக்கிறார்கள்.
இன்னும்ஒரு சரியான வழிகாட்டியின்றி தான் ஆரம்பகவிஞர்கள் மனம் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. போட்டிகள், விருதுகள், சான்றுகள் என ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 
ஹைக்கூ சற்று எழுதி பழகக்கற்றுக்கொண்டவர்கள் சக நண்பர்களுக்கு சொல்லிக்கொடுக்கவும் தங்கள் பதிவுகளை முன் வைத்து நடத்துகின்றனர்.
யுகபாரதி கந்தகப்பூக்கள் அவர்களும் இதுகுறித்து விளக்கமளித்து வருதலை நானும் வாசித்து கடக்க தவறுவதில்லை.
ஹைக்கூ பற்றி நா.விச்வநாதன் அவர்களும் அடிக்கடி அடர்த்தியுடன் இவ்வகைமையில் கருத்துக்களையும் கவிதைகளையும் நகர்த்திச்செல்கிறார்.
ஹைக்கூ தோட்டம் என்ற குழுமம் ஆர்வத்துடன் தொடங்கி முழுதாக தொடரவியலாமல் நிறுத்தமும் பெற்றிருக்கிறது.
தொடர்ந்து ஹைக்கூ தோட்டம் , ஹைக்கூ உலகம் , எனது முகநூல் பக்கம் என்று அவ்வப்போது ஹைக்கூ பற்றிய கருத்துக்களை பதிவுசெய்து தற்போது இக்குழுவிலும் இதைப்பற்றி கருத்தினை இங்கு முதல்முறையாக பதிவிடுகிறேன்.
ஹைக்கூவை தெளிவுபடுத்தும் நபர்களின் வரிசையில் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு தெரியாது. 
இதைப்பற்றி புரிதலின்றி சிலர் எழுதிவருகிறார்கள் என்பது மேலோட்டமான கருத்து. சிலர் போலச்செய்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு. சிலர் அடிபிறழாமல் எடுத்து கவிதைதிருட்டு நடக்கிறது என்பதை ஆதாரத்தோடு எடுத்து பதிவது மனதை தடுமாறச்செய்துவிடுகிறது.
எது ஹைக்கூ ? அதை எப்படி எழுதவேண்டும் ? எப்படி அதை வாசிக்கவேண்டும் ? என்றெல்லாம் பதிவுகள் தொடர்ந்து வருகின்றன.ஒரு ஹைக்கூ படிப்படியாக எப்படி தோன்றியது என்றும் அது மூன்றுவரிகளில் எப்படி காட்சிபடுத்துகிறதென்றும்; அது முடிந்தபின் மனதிற்குள் விரிகிற காட்சிகளையும் கவிஞர்கள் அடிக்கடி சிலாகித்து பதிவிட்டு வருகின்றனர்.
படங்கள் தந்தும்; இரண்டு வரிகள் தந்தும் ஹைக்கூவை பயிற்சியின் அடிப்படையென்று ஹைக்கூவை வலிந்தும் எழுத வைக்கப்பட்டு வருகின்றன.
ஹைக்கூவைப்பற்றிய செய்திகள்; கருத்துரைகள் எல்லோரும் கூறியது கூறலையே தரப்பட்டு வருகின்றன.
ஈரோடு.தமிழன்பன், நா.விச்வநாதன், மித்ரா, அமுதபாரதி, மு.முருகேஷ் மற்றும்பலர் ஹைக்கூவில் முத்திரை பதித்தவர்கள்.அவர்கள் நூலினை ஹைக்கூ எழுதவிரும்புபவர்கள் முழுமையாக வாசித்து பின் எழுதத்தொடங்கலாம்.
ஜப்பானிய ஹைக்கூக்கள் போல எழுதுவதென்றால் மனதில் ஜென் துளிர்க்க வேண்டும்.
தமிழக ஹைக்கூக்கள் சற்று வேறு நிலைப்பாடுகளில் பரவிகிடக்கிறது.
தெரிந்தவைகளையே சொல்லிக்கொண்டு இன்னும் வரிகளை நகர்த்தவிரும்பவில்லை. ஹைக்கூ உலகத்தில் ரமேஷ் இதனை சிறப்பாக வகைப்படுத்தியிருப்பார்.
சில புரிதல்களும் தெளிவுகளும் கவிஞர்களிடம் நிறைவாக இல்லையென்பதே ஹைக்கூவை பொருத்தவரை பொதுவில் வைக்கப்படுகிற ஒரு குற்றச்சாட்டு.
கவிஞர்கள் ஹைக்கூவை படைப்பதில் எந்த இடத்தில் கவனத்தை சிதறடித்து விடுகிறார்கள் என்பதை நான் வாசிக்கும் போது கவனிப்பதுண்டு.சில சமயம் சுட்டும்போது அது விவாதகளமாகவும்; தர்க்கமாகவும் மாறி மனதை உளவியல் ரீதியாகவும் பாதித்தும் இருக்கிறது.
நான் சரியான வழிகாட்டியா எனத்தெரியாது. இருந்தாலும் சில எனது அனுபவங்கள் உங்களுக்கு நல்ல ஒரு ஹைக்கூ எழுத மனதை கொண்டுசெல்லும் என்ற நம்பிக்கை தான் அடிக்கடி எழுத தூண்டுகின்றன.
இன்றைய தினமலர் வாரமலரில் இதழின் பின் அட்டையில் பாரியன்பன், குடியாத்தம் அவர்களின் ஹைக்கூக்கள் பிரசுரமாகியிருந்ததை வாசித்தேன்.
நண்பர் பாரியன்பன் கவிதை சிந்தனை அதிகம் பெற்றவர். ஹைக்கூ , நவீனம் என்று எல்லா சிற்றிதழ்களிலும் வணிக இதழ்களிலும் முகநூலிலும் எழுதி வருபவர். எனது அருவி இதழிலும் தொடர்ந்து எழுதிவரும் இனிய நண்பர். சமீபத்தில் அவரது ஹைக்கூ நூலொன்றிற்கும் அணிந்துரை வழங்கியிருக்கிறேன். அவரது ஹைக்கூ கவிதைகள் இப்பதிவுக்காக இங்கு எடுத்துக்கொள்கிறேன்.
சில நிறைவுகளும் சில குறைகளும் இங்கு பொதுவில் வைப்பதால் எல்லோரும் திருத்திக்கொள்ளவும், ஒரு புரிதல் ஏற்படவும் இது பயன்படும்.
-இலைக்குப் பின்னால்
மறைந்து கொள்கிறேன்
பலத்த காற்றும் மழையும்.
சிறப்பான கற்பனை. இதை ஹைக்கூ என்று ஏற்கலாமா வேண்டாமா என்பது ஒரு புறம் இருக்கட்டும். இது ஒரு நவீன சிந்தனை.நவீன கவிதைத்தன்மையை உள்ளடக்கியிருக்கிறது.
கொஞ்சம் வரிகளை மாற்றிப்போட்டால் ஒரு ஹைக்கூவின் தன்மை பளிச்சிடும்.
- மறைந்து கொள்கிறேன்
இலைகள் பின்னால்
பலத்த காற்றும் மழையும்.
ஹைக்கூ மூன்றுவரி.ஒரு ஹைக்கூ இரண்டுவரியில் உள்ளது.
-முன் வாசலில் மணக்கிறது
கொடிமுல்லை.
ஆழ்ந்து யோசித்தால் சிறு மாற்றம் தரலாம்.
- ரசிக்கிறேன்
முன் வாசலில் கோலமில்லை
கொடி முல்லை.
பொதுவாக ஹைக்கூவிற்கு சொற்சிக்கனம் தேவை. ஒரு முறை எழுதிபார்த்துவிட்டு பொருள் மாறாமல் தேவையற்ற சொற்களை நீக்கலாம்.
பாரியன்பனின் ஹைக்கூ:
நேற்றின் மீதமிருந்தது
நெஞ்சில் உன் நினைப்பும்
சட்டியில் பழைய சோறும்.
இதை இப்படி சொற்கள் குறைத்து எழுதலாம் .
-நேற்றின் மீதமிருந்தது
உன் நினைவும்
கொஞ்சம் பழைய சோறும்.
பாரியன்பனின் இன்னொரு ஹைக்கூ:
-பிரார்த்தனைக்காக
ஏற்றப்படாத போதிலும்
கண்ணீர் சிந்தும் மெழுகுவர்த்தி.
கொஞ்சம்இப்படி மாற்றி யோசிக்கலாம்.
-பிரார்த்தனை
கண்ணீர் சிந்துகிறது
எரியும் மெழுவர்த்தி.
வாரமலரில் இன்று பிரசுரமான கவிதைகளில் சிலமட்டும் இப்படி அமைந்திருந்தால் ஹைக்கூ வாசிக்க சுவைகூடும் என்பதை முன்வைக்கிறேன்.
நணபர் பாரியன்பனுக்கும்; இக்குழுவிற்கும் வாசித்துக்கடப்பவர்களுக்கும் என் நன்றிகள்.
-காவனூர்.சீனிவாசன்.

மார்ச் 11, 2017

இதுதான் ஹைக்கூ விளக்கத்துடன் ராஜன் ராஜ்

சக்திப்பிரியன்    ஹைக்கூ
விளக்கம் - ராஜன் ராஜ்
அந்த ஹைக்கூவின் முதல் வரி
என ஆரம்பிக்கிறது. யாருக்கு நிறைமாதம் ஒரு பெண்ணுக்காக இல்லை விலங்கிற்காக என்பதை இங்கு தெளிபடுத்தடுத்தப்படுவில்லை கவிஞர்.
ஹைக்கூவை பொறுத்தவரை அது நல்ல சூட்சுமம் தான். அதையடுத்து ஹைக்கூவின் அடுத்த வரியை படித்தேன்.
என இரண்டாம் வரி நிறைவுகிறது. இந்த வரி முதலாம் வரிக்கான சந்தேகத்திற்கும் ஊகிப்பிற்கும் முற்றுப்புள்ளியாக அமைகிறது. விலங்கினத்தின் கர்ப்பம் பற்றி முதல் வரியில் கவிஞர் சொல்லவில்லை என்பதை இரண்டாம் வரி தெளிவாகச் சொல்கிறது. கணவன் சுமக்கிறான் என்னும் போது அவன் மனைவியாகத்தானே இருக்க வேண்டும்.
சரி ஏன் அவளை கணவன் சுமக்க வேண்டும். அன்பின் மிகுதியாலா இல்லை அவளால் நடக்க இயலாமையால, இல்லை பிரசவ வலியாலா அப்படியென்றால் வேறு ஏதும் வாகனமில்லையா அவளைச் சுமக்க, அப்படியாயின் குடும்பத்திற்கு வறுமையா என்னும் எண்ணங்கள் ஓடுகிறது.
இல்லாவிடின் வாகனத்திலிருந்து இறக்கி வேறு எங்கோ தூக்கியும் சென்றிருக்கலாம் தானே. எது எவ்வாறோ இருக்கட்டும் கணவன் தன் நிறைமாத கர்ப்பினி மனைவியை தூக்கிறான் என்பது மகிழ்வான விடயமே. தூக்குமளவிற்கு வீரமும் அவனுக்குள்ளது என்பதும் புலனாகிறது.
அத்தோடு கவிஞர் #சுமந்து_செல்கிறான்_கணவன் என இரண்டாம் வரியை முடித்திருப்பதிலிருந்து கவிஞர் தன்னைச் சொல்லவில்லை அதாவது அந்த கணவன் அவர் இல்லை என்பது புலனாவதோடு இங்கு கவிஞர் தவிர்ந்த இரண்டாம் நபர் பற்றியதாக இக் கவி அமைகிறது என்னும் முடிவை இரண்டாம் வரி எனக்களிக்கிறது. அப்படியே மூன்றாம் வரியையும் படித்தேன்
என மூன்றாம் வரி முற்றிலும் மாறுபட்டு அமைந்து திருப்பத்தை அளிக்கிறது. முன்பு நான் எதிர்பார்த்து ஊகித்த பலவற்றை மூன்றாம் வரி ஏமாற்றிவிட்டது. அந்நிலையில் மீண்டும் கவிதையை முழுமையாக ஒரு மூச்சாக படித்தேன்.
நிறைமாத கர்ப்பம்
சுமந்து செல்கிறான் கணவன்
ஒட்டகத்திற்கு தண்ணீர்
ஏன் கணவன் ஒட்டகத்திற்கு தண்ணீர் சுமக்க வேண்டும். ஒரு வேளை ஓட்டகத்திற்கு கர்ப்பமோ என எண்ணத் தோன்றுகிறது. அப்படியென்றால் தண்ணீர் சுமப்பவன் கணவன் என வருகிறதே மனிதன் எப்படி ஒட்டகத்திற்கு கணவனாக முடியும் என்னும் பெருத்த கேள்வி இப்போது எழுகிறது. அதற்கு ஒரு வேளை கவிஞர் பெண்பாலாக இருந்து அவருடைய கணவர் ஓட்டகத்திற்கு தண்ணீர் சுமந்து சென்றிருக்கலாம் அதை கவிதை எழுதும் அவனது மனைவி பார்த்து ஹைக்கூவாக சொல்லியிருக்கலாம் என நினைத்தால் பதில் சரியாக இருக்கும். ஆனால் சக்திபிரியன் திருமணம் ஆகாத ஒரு ஆண் என தெரிந்தவர்கள் இவ்வாறு நினைக்கமாட்டார்கள்.
பொதுவாக ஒட்டகங்கள் அரபு நாடுகளில் அதிகம் காணப்படும். சக்திபிரியன் அரபு நாட்டில் பணி புரிகிறார் அங்கு அவர் இப்படியான காட்சியை கண்டு எழுதியிருக்கலாம்.
அது எப்படியான காட்சி என்பதே இறுக்கமான முடிச்சாக அமைகிறது. கணவனும் மனைவியும் ஒட்டகத்தில் பிரயாணம் போயிருக்கலாம். அது அவர்களின் ஏழ்மையாலும் இருக்கலாம் இல்லாவிடின் செல்வந்த குடும்பமாக இருக்கலாம். பணக்கார குடும்பமெனின் பிறகு ஏன் ஒட்டகத்தில் மனைவியை ஏற்றிச் செல்ல வேண்டும் என்னும் கேள்வி எனக்கு எழுவது போல் உங்களுக்கும் எழலாம். கர்ப்பகாலங்களில் பெண்களின் ஆசைகளோ ஆச்சரியமானதாக அமையும். அவ்வாறான ஆசையால் இப் பெண் ஓட்டகத்தில் போக ஆசைப்பட்டிருக்கலாம். இல்லாவிடின் பணக்காரர்களுக்கும் ஏழ்மையை அனுபவிக்கும் ஆசை எழுவது சகஜமானதே அப்படியாகவும் இந்த காட்சியை பார்க்கலாம். பிறகு ஏன் ஓட்டகத்திற்கு தண்ணீர் சுமந்து வர வேண்டும் என்னும் கேள்வியும் எழுகிறது. ஒட்டகத்திற்கு தாகமோ அல்லது களைப்போ மயக்கமோ ஏற்பட்டிருக்கலாம் அதனால் நகரமுடியாமல் அது படுத்தபடியோ அல்லது நின்றபடியோ இருந்திருக்கும் தன் நிறைமாத மனைவியை அழைத்துச் செல்ல ஒட்டகத்திற்கு தண்ணீரை கொடுத்து அதன் களைப்பை போக்க முற்பட்டிருக்கலாம். அதற்காக கணவன் தண்ணீர் சுமந்து வந்திருக்கலாம் எனவும் எண்ணத் தோனுகிறது.
இன்னொர் வகையில் நிறைமாத கர்ப்பவதியான மனைவியை கவனிக்காத கணவனின் அசமந்த போக்கை சக்திபிரியன் நகைக்கிறாரோ எனவும் எண்ணத் தோனுகிறது. ஒட்டகத்தை வளர்க்கும் பராமரிக்கும் கணவன் தனது கர்ப்பமான மனைவியை கவனிக்காது பொறுப்பற்று இருப்பதை ஜாடையாக எள்ளி நகையாடி சொல்வது போலும் தெரிகிறது.
ஆனால் இதில் இன்னொர் படிகத்தன்மையும் உள்ளது. அது எப்படியாக என்றால் இந்த குடும்பம் ஒரு வறுமைக் குடும்பமாக இருப்பின் நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் மனைவியின் மருத்துவச் செலவீனங்களுக்காக பாடுபாடும் கணவனின் உழைப்பையும் அவனுக்கு இருக்கும் இரு பக்க நெருக்கடியும் சக்திபிரியன் சொல்லியிருக்க கூடும்.
இப்படியாக பொருள் தேடலில் சிக்கல் தன்மை ஏற்படுவதற்கு காரணம் கவிஞரின் வெளிநாட்டு பணியே. இதனால் கவிதையின் காட்சி எந்த நாட்டிற்குரிய களமாக இருக்கும் என்பது இதிலுள்ள பெரிய சிக்கடியாகும். நான் நினைக்கிறேன் கவிதையின் முதல் வரியான
நிறைமாத கர்ப்பம்
என்பது தமிழகத்தை சுற்றியும் பின்னிரு வரிகளான
சுமந்துசெல்கிறான் கணவன்
ஒட்டகத்திற்கு தண்ணீர்
என்பவவை அரபு தேசத்தினை களமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம். அது எவ்வாறு என்றால் தன்னுடன் பணி புரியும் சக நண்பரின் மனைவி தமிழ்நாட்டில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கலாம். அதை பணிபுரியும் நண்பர் சக்திபிரியனிடம் சொல்லியிருக்கலாம். நண்பர் ஒட்டகத்தை பரமாரிக்கும் வேலையில் ஈடுபடும் போது சக்திபிரியனுக்கு நண்பர் முன்னர் சொன்ன விடயம் ஞாபகத்திற்கு வந்ததும் மூன்றாம் நிலை மனிதராக கவிதை எழுதியிருக்கலாம்.
இல்லாவிடின் ஒட்டகத்திற்கு தண்ணீர் வைக்கும் நண்பர் தன் மனைவியை பார்க்க முடியாமல் படும் அவஸ்தையும் ஆதங்கத்தையும் சொல்ல சக்திபிரியனின் கவிதை உள்ளம் விரிந்து அதனை உள்வாங்கி ஹைக்கூவாக மலரச் செய்திருக்கலாம் என்பதையே எனது முடிவான அனுமானமாக அமைகிறது.
எது எவ்வாறாயினும் ஒரு ஆணின்,உழைப்பு,வேதனை,ஆற்றாமை, ஆசை, வெளிநாட்டு வாழ்வில் இருந்தபடி உள்நாட்டிலிருக்கும் மனைவி மீதான அன்பு, கரிசனை என்பதை சொல்வதாகவும் அமைகிறது. ஒரு கோணத்தில் கணவனின் அசமந்த போக்கை சொல்வதாகவும் இக் ஹைக்கூவை கவிஞர் சக்திபிரியன் விரியச் செய்துள்ளார்.
இந்த கவிதையின் பொருள் இறுக்கத்திற்கு காரணம் காட்சியின் களங்கள் எங்கு என்பதை திட்டவட்டமாக சொல்லாமையே. அதுதான் இக் ஹைக்கூவின் வெற்றியுமாக மாறியிருக்கிறது.
நண்பர் சக்திப்பிரியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்னொரு ஹைக்கூவோடும் இன்னொரு தேநீர் கோப்பையோடும் மீண்டும் வருவேன்.
பா.தா

மார்ச் 05, 2017

இதுதான் ஹைக்கூ - தெளிவு கொள்வோம்.

 Saradha Kannan - ராஜன் ராஜ் - நன்றி
#மூன்றடிக்கு நூறடிகள் விமர்சனம்.. 
ஹைக்கூ மீது அவருக்குள்ள தணியா தாகத்தை காட்டுகிறது..
சேவல் சண்டை 
காலில் பலத்த காயம் 
கூட்ட நெரிசல் - Saradha Kannan

#பலமான_ஈற்றடியோடு_ஒரு_ஹைக்கூ
ஒரு நல்ல ஹைக்கூ வாசகனுள் தரிப்பை ஏற்படுத்திவிடும். அந்தஹைக்கூ தன்னைப் பற்றி தேட வாசகனை அழைத்தும்விடும். அப்படியான ஒரு ஹைக்கூவை நேற்றிரவு Saradha Kannan அவர்களின் முகநூல் பதிவில் படிக்க நேர்ந்தது மகிழ்சியளித்தது என்பதோடு அதன் ஈற்றடி விசாரங்களை என் சிந்தைக்கு ஏற்படுத்தியது. அந்த கவிதையின் முதலாம் வரி
#சேவல்_சண்டை
என ஆரம்பமாகிறது. இவ்வரியை நான் படித்ததும் இயல்பாக இரு சேவல்கள் சண்டையிடும் காட்சி என் மனக் கண்களுதோன்றியது. நாம் வீட்டில் வளர்க்கும் கோழிகளுக்குள் இவ்வாறு சேவல் சண்டை நிகழ்வது இயல்பானதே. என நினைத்துவிட்டு இரண்டாம் வரியை படித்தேன்.
#காலில்_பலத்த_காயம்
என இரண்டாம் வரி அமைந்திருந்தது. சரி யாரின் காலுக்கு பலத்த காயம் இரு சேவலில் ஒரு சேவலின் காலுக்கா இல்லை அந்த சண்டையை பார்த்திருப்பவருக்கா என்னும் எண்ணத்தை இரண்டாம் வரி கொடுத்திருக்கையில் மூன்றாம் வரியை படித்தேன்.
#கூட்ட_நெரிசல்
என மூன்றாம் முடிந்திருந்தது. மீண்டும் ஒரு மூச்சாக ஹைக்கூவை வாசித்தேன்.
சேவல் சண்டை 
காலில் பலத்த காயம் 
கூட்ட நெரிசல்
நாம் எதிர்பாராத ஆச்சரியமான திருப்பத்தைத்தான் இந்த மூன்றாம் வரி தந்திருக்கிறது. 
இந்த வரியால் என்னுள் எழுந்த பல ஐயங்களின் கட்டுக்களை என்னால் அவிழ்க்க முடிந்தது.
அந்தவகையில் இந்த சேவல்ச் சண்டை கிராம/நகரத்தில் இடம் பெறும் சேவல் சண்டை போட்டி என்னும் முடிவை ஈற்றடி தந்தது.
யாருக்கு பலத்த காயம் ஏன் பலத்த காயம் வர வேண்டும் என்பதற்கான புதிர்களுக்கான விடையும் இவ் ஈற்றடியிலே உள்ளது. சேவல் சண்டை போட்டியை பார்க்க பார்வையாளர்கள் நிறைந்திருந்திருக்கலாம். அதனால் இக் கவிஞரும் அக்கூட்டத்தில் நின்றிருக்கலாம் அதில் அவர் கால் மிதியுன்டு இருக்கலாம் இல்லாவிடின் வேறு ஒரு பார்வையாளனின் கால் மிதி பட்டு காயம் வந்திருக்கலாம். இல்லாவிடின் கவிஞருக்கு அல்லது வேறு பார்வையாளருக்கு ஏற்கனவே காலில் சிறு காயமிருந்திருக்கலாம் நெரிசலால் அது பலமாக பெரிதாக மாறியிருக்கலாம். இல்லாவிடின் மிதிபட்டு அல்லது காலில் ஏற்கனவே கவிஞருக்கு அல்லது வேறு ஒரு பார்வையாளருக்கு காயமிருந்திருப்பின் அவ் வலியை போக்க அமர முடியாத அளக்கு இருக்கும் சன நெருசலை கவிஞர் சொல்லி இருக்கலாம். இல்லாவிடின் உண்மையிலே கோழியின் காயத்தையும் சொல்லியிருக்கலாம். எனவும் எண்ணுகிறேன்.
இவற்றை விடுத்து இவ்வாறும் அமைந்திருக்க கூடும் சேவல் சண்டையிட அவற்றின் கால்களில் காயம் வர எந்தச் சேவல் வெற்றியீட்ட போகிறது என்னும் ஆர்வத்தில் மக்கள் கூடுவதையும் சாரதா கண்ணன் சொல்லியிருக்கலாம்.
இல்லாவிடின் சேவல் சண்டை நிகழ்த்த தடையிருப்பின் பொலிஸாரோ அல்லது அது குறித்த அமைப்போ வந்திருக்கலாம் அதனால் மக்கள் பீதியில் ஒடும் போது கீழே விழுந்து காயம் வந்திருக்கலாம், இல்லாவிடின் விழுந்தவரை மக்கள் மிதித்து காயம் வந்திருக்கவும் வாய்ப்புள்ளது.
இவற்றைத் தவிர இவ்வாறும் நிகழ்ந்திருக்கக்கூடும். இரு தரப்பு சேவல் காரர்களின் வெற்றி தோல்வி சண்டையாக உருவெடுத்திருக்கலாம். அதில் யாருக்கோ பலத்த காயத்தை ஏற்படுத்தும் படியான தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம். இல்லாவிடின் அச் சண்டையில் பீதியுற்று மக்கள் ஓடும்போது யாரோ ஒருவரின் கால் மிதிபட்டோ விழுந்தோ காயப்பட்டிருக்கலாம்.
ஏன் இற்றையேல்லாம் விடுத்து சண்டைச் சேவல் பார்த்திருப்பவரை கொத்தியிருக்கலாம். காலில் காயமிருந்திருக்கலாம் அது கொத்து வாங்கிய பின் பலமாக மாறியிருக்கலாம். இல்லாவிடில் சேவல் தூரத்த சேவல் சண்டை பார்க்க வந்தவர்கள் கலைந்து ஓடியிருக்கலாம் அதனால் மிதிபட்டு விழுந்து யாரோ ஒருவருக்கு காயம் வந்திருக்கலாம்.
தவிர அரசியல் கட்சிகளின் கண்ணோட்டத்தோடு குறியீட்டு கவிதையாகவும் இதனை பார்க்கலாம் தொண்டர்களின் பாதிப்பு நிலையை சுட்டுவதாகவும் இக் ஹைக்கூ என் பார்வையில் அமையப் பெறுகிறது.
மேற் சொன்ன ஹைக்கூ குறித்த பார்வைகள் எனது பார்வைகளே நீங்கள் வேறு கோணங்களுடாகவும் பார்க்க இயலும் நண்பர்களே. அதில் தவறில்லை.
இந்த ஹைக்கூவின் முழுப் பலமும் இதன் சிறப்பான ஈற்றடியிலே அமைந்துள்ளது. அத்தோடு அது முன்னிரு வரிகளுக்கு இயைபுபட்டு வந்திருப்பதோடு பாரிய திருப்பத்தையும் கொடுத்துள்ளது. அருமையான ஹைக்கூவை படைத்த சாரதா கண்ணன் அக்காவுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
இப்போது சேவல் சண்டையை பார்த்த உணர்வுவோடு நிறைவு செய்கிறேன். மீண்டும் இன்னொரு ஹைக்கூவோடு வேறு பரிணாமத்தோடு வருவேன்.
பா.தா

டிசம்பர் 20, 2016

ஹைக்கூ திருத்தம்...

கவிஞர் வீரா
அணில்
நின்று கொண்டிருக்கிறது
பூனையின் கல்லறையில்.
திருத்தம் – 
பூனையின் கல்லறை
நின்றுகொண்டிருக்கிறது
அணில் 
- என்று வருவது சிறப்பு. யாரோ ஒருவர் ஆச்சர்யம்தான் கல்லறைகட்டியிருக்கிறார்கள்... அந்தக் கல்லறை நின்றுகொண்டிருக்கிறது - அவரின் அன்புக்குச் சாட்சியாகவும் அல்லது மூன்றாவது அடியில் இருக்கும் அணில் இரண்டாவது அடியில் நின்றுகொண்டிருக்கிறது - நின்றுகொண்டிருப்பது - பூனையின் கல்லறையை வணங்கியபடி என்று எடுத்துக்கொள்ளலாம். நட்பும் வெளிப்படும்.

நவம்பர் 04, 2016

சிலுவை

காவல் தெய்வத்தை மீறி
உள்ளே நுழையும் பாதிரியார்
வெளியேறினான் பரமசிவன்

ஒன்றிரண்டு மரங்கள்
வெடி கற்கள் சிதறியிருக்க…
ஒரு பாறையில் சிலுவை

அக்டோபர் 21, 2016

மகிழ்நன் மறைக்காடு - ஹைக்கூக்கள்

மகிழ்நன் மறைக்காடு - ஹைக்கூக்கள்
மழை நின்ற பின்னிரவு
மெல்ல நகர்ந்து செல்கிறது
ஆமை முதுகில் நிலவொளி !
---------------------------------------------
உடைந்த வளையல்
உருப்பெறுகிறது பூக்களாய்
கலைடாஸ்கோப் !
---------------------------------------------
திரும்பத் திரும்ப
சலித்துக் கொள்கிறாள் உழத்தி
களத்தில் தானியங்களை !
---------------------------------------------
பட்டமரம்
கணநேரத்தில் பசுமையாகிறது
வந்தமரும் கிளிக்கூட்டம் !
---------------------------------------------
கைகளில்லை
முகத்தில் அறைகிறது...
கதவைத் திறந்ததும் காற்று !
---------------------------------------------
ஓய்வே இல்லை
முத்தமிட்டுக் கொண்டே...
கரையை அலைகள் !
---------------------------------------------
இணையாய்ப் பயணம்
இறுதிவரை தொடாமலேயே
வண்டிச்சுவடுகள் !
---------------------------------------------
முண்டியடிக்கும் கூட்டம்
அளந்து பேச முடியவில்லை
ரேசன்கடைக்காரர்.
---------------------------------------------
ரொம்ப கூச்சமோ ?
தொட்டதும் சுருண்டு விட்டாயே...
மரவட்டை !
---------------------------------------------
அருவருத்தவன்
ஆராதிக்கிறான்
பட்டாம்பூச்சி !
---------------------------------------------
புத்தகத்தில் மயிலிறகு
குஞ்சு பொரித்திருக்கிறது...
உதிர்த்துச் சென்ற மயில் !
---------------------------------------------
நடுநிசி தார்ச்சாலை
மனம் பிறழ்ன்றவன் காறியுமிழ...
சிறைபடுகிறது நிலா !
---------------------------------------------
எண்ணற்ற கால்கள்
இறந்து போன ஈக்கு...
இழுத்துச் செல்லும் எறும்புகள் !
---------------------------------------------
அசையும் வயற்கோரை
சிதறித் தெறிக்கும் சிறுமின்னல்
மழைக்கால நிலவொளி !
---------------------------------------------
சிவப்பாக இல்லை
பச்சையாகவே ; கிளிமூக்கு
மாங்காய் !
---------------------------------------------
குறைந்து வரும் மரங்கள்
கூடிக் கொண்டே போகிறது...
மண் - மழை இடைவெளி.
---------------------------------------------
உறக்கம் வராத இரவு
வானத்தை மூடி மூடித் திறக்கிறது
இமைகள்.

அக்டோபர் 06, 2016

ஹைக்கூக்களில் கிராமிய வாழ்வியல்

ஹைக்கூக்களில் கிராமிய வாழ்வியல் – நன்றி தமிழமுது கவிச்சாரல்


விட்டு விடுங்கள் என்னை
வேலையில்லா ஊதியம்
நூறு நாள் திட்டம்

முறை மாமன்
பரிசத்துக்கு பரிசளித்தான்
வலைத்தொடர்பு சாதனம் 

காணாமல் போனது
திருவிழா கூட்டத்தில்
உறவுகள்

விற்றன அகல்விளக்குகள்/
குடிசைக்குள் குயவன் திரும்ப /
நுழைகிறது நிலவொளி

Devarajan Rajan 
உறக்கம் விழித்தேன்/
முதுகில் பெருக்கல் ஓவியம்/
கயிற்றுக்கட்டில்.

J K Balaji   
ஆழ்ந்த உறக்கம் மரத்தடியில்
தெருவோரம் தாலாட்டும் நாய்கள்
ஒருநிமிட அன்னை 

தாங்கி பிடித்து
தாய்போல் தாலாட்டியது
மரத்தில் தூளி

மூழ்கியும் மலர்ந்தன
நீர் வட்டங்களாய்
குளத்தில் எறிந்த கல் 

இறந்துபோனான் விவசாயி
வயிறு நிறைய சாப்பிட்டு
பூச்சி மருந்து

ஒற்றையடிப்பாதைக்குள்/
ஒளிந்து கிடக்கிறது/
மீத்தேன்.

சிறுமிக்கு வயிற்று வலியாம்
விருந்தும் மருந்தோடு
அடைக்கப்பட்டாள் கூண்டுக்குள்...!

ஒருவழிப்பாதை
இருபுறமும் புற்களும்
முட்களும் நிறைந்ததாக.!!

ஆனந்த பயணம்
அமர வசதியில்லை
நுங்கு வண்டி

சமைக்கும் முன்னே
புழுவுக்கு உணவாகிறது!
ரேசன் அரிசி!

ஒத்தையடிப் பாதை
கூடவே பயணிக்கிறது
கடந்த கால நினைவுகள்




செப்டம்பர் 29, 2016

பனையேறி

பத்து பதினைந்து; பனையேறி
குஞ்சோடு இறங்குகிறான்
மாரடிக்கும் கிளிகள்
முதலில் இவ்வாறு எழுதப்பட்டது -
பத்து பதினைந்துக்காய்
பனையேறி குஞ்சோடு இறங்குகையில்
பனையில் அமரும் கிளி மாரடிக்கும் (உரைநடை போல் இருக்கிறதுதானே!)
(பத்து பதினைந்து - ரூபாயை குறிக்கும். ஒரு சமயம் மரத்தையும் குறிக்க அவன் அதே தொழிலையே செய்துகொண்டு இருக்கிறான் என்பதுமாக ஹைக்கூவின் பொருள் விரியும். இன்னும் விரியும்...)

செப்டம்பர் 25, 2016

அரளிச் செடி


வீட்டை பூட்டி-திரும்பியதும்
முகம் பதித்து காத்திருக்கும்
மஞ்சள் நிறப் பூனை


உருவங்கள் தெளிவில்லை
அரளிச் செடியில்...
மஞ்சள் மஞ்சளாய் பூக்கள்


எங்கெங்கென்று தேடும்போது
கூவத் தொடங்குகின்றன…
கண்மறைவில் சுவர்க்கோழிகள்

செப்டம்பர் 23, 2016

கொள்ளிவாய்ப் பிசாசு

கொள்ளிவாய்ப் பிசாசு
தலைவிரித்தாடி செல்கிறது
தொலைவில் கண்மூடி நிற்கிறேன்

கொள்ளிவாய்ப் பிசாசு - விளக்கம் 

கிராமப்புறங்களில் பூமியிலிருந்து திடீர் திடீர் என நெருப்புச் சுடர் தோன்றி விட்டு விட்டு எரிந்துகொண்டே நகருவதைப் பார்த்திருக்கலாம். இதனைப் பார்க்கும் மக்கள் அறியாமையின் காரணமாக கொள்ளிவாய்ப் பிசாசு போகிறது என்று கூறுவர். நானும் சிறு வயதில் பார்த்திருகக்கிறேன். அப்போது பயந்து கண்மூடிய நினைவும் இப்போதும் இருக்கிறது. சரி... உண்மையிலேயே கொள்ளிவாய்ப் பிசாசு என்ற ஒன்று இருக்கிறதா என்றால், இல்லை என்றே அடித்துக் கூறலாம். பின் எப்படி இந்த நெருப்புச் சுடர் தோன்றுகிறது?
பூமியின் மீது கொட்டப்படும் அல்லது கொட்டும் இலைகள் மற்றும் மக்கும் பொருள்கள் ஆகியவை பாக்டீரியாக்களின் வினையினால் அழுகிய நிலையை அடைகின்றன. அழுகிய நிலையை அடைந்தபோது மீத்தேன் வாயு உண்டாகிறது. பூமிக்குள் (சதுப்பு நிலப் பகுதிகளில்) உண்டாகிய இந்த மீத்தேன் வாயு பூமியின் மேல் உள்ள சிறுசிறு துளைகளின் வழியாக வெளியேறுகின்றது.
மீத்தேன் வாயு சாதாரண வெப்ப நிலையில் தன்னிச்சையாகத் தீப்பிடித்து எரியும் தன்மையுடையது. எனவே, பூமியிலிருந்து வெளியேறிய மீத்தேன் வாயுவானது வாயு மண்டலத்தினுள் வந்தவுடன் தானாகத் தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கின்றது.
இந்த உண்மையை அறியாத மக்கள் கொள்ளிவாய்ப் பிசாசு உலவுவதாகக் கூறுகின்றனர். (விளக்கத்துக்கான நன்றி - http://www.periyarpinju.com/2011/may/page08.php