© கவியருவி ம. ரமேஷ் - காதல் தோல்வி கவிதைகள்
· காதலைப்
பெற…
“ஒன்றை இழந்துதான்
மற்றொன்றைப் பெற வேண்டும்” என்றால்
சரி சொல்லுங்கள்
நான்
காதலைப் பெற
எதை இழக்க வேண்டும்?
· பூவா? தலையா?
அன்பே!
உன்னை காணாதபோது
பூவா? தலையா?
விளையாடுவேன்.
அதிகம் விழுவது
பூ தான்!.
எங்கே?
நீயாவது வந்து
கொஞ்சம்
தலையைக் காட்டிவிட்டு
போ.
· ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் போ…
திரைப்படத்தில் வரும்
நடிகையைப் போன்று -
ஒரு முத்தம்
கொடுத்துவிட்டுப் போ…
அடுத்து வரும்
நாயகியின்
கிழிசல்களுக்கு
அது -
ஊசியாகிவிட்டுப் போகும்.
· முறையற்ற
காதல்
ஒவ்வொரு முறையும்
உன்னை பார்க்கும்போது
கட்டியணைத்து -
முத்தமிட்டு -
இன்றும்!
என்னிடத்தில் இருக்கும்
அன்பை
வெளிப்படுத்தத் துடிக்கும் மனது.
என்ன செய்வது?
அந்த ஆசைக்கு
முன்னே தோன்றி காட்சியளிக்கும்
உன் கழுத்துத் தாலி!
· சுற்றிவளைத்து…
“வண்ணத்துப்பூச்சிக்கு
அதன் வண்ணம் சிறப்பில்லை
பூக்கள் மீது அமர்கிறது”
ஒரு மலர் கண்காட்சியில்
என்னிடம்
சுற்றிவளைத்துச் சொன்னதின் பொருள்
இன்றுதான் விளங்குகிறது.
· அன்பு சற்று
அதிகம்
உலகில்
அனைத்துமே
சரிசமம்.
காதலில் மட்டும்
சற்று அதிகம் -
ஒருவர்மீது
மற்றொருவர் கொண்ட
அன்பு!
· பாழாய்ப்போன
இதயம்!
நான்
உன் இதய வாசலிலிருந்து
வெளியேறியபோது -
உன்
மனத்தில்
வலது காலை இடித்துக்கொண்டேன்.
அப்போதும்
உன் இதயம் சொல்கிறது:
ஒரு நிமிடம் -
என் கண்ணீரை அருந்திவிட்டு
கவனமான வெளியேறு!
· எனக்கான
உலகம் நீ…!
எனக்கான உலகம்
நீ.
அதில் -
நீ
ஆதாம்.
நான்
ஏவாள்.
(கவிதை எழுதும்போதே விலக்கப்பட்ட கனிப் பற்றி எதிர்கேள்வி வரும் என நினைக்கிறேன். அவர்களுக்கான பதில் இதோ: விலக்கப்பட்ட கனி என்ற ஒன்று இருந்ததால்தான் அதை உண்டு பகுத்தறிவு பெற்றார்கள். அதனால் சிக்கல்கள் உண்டானது. ஆனால் காதலுக்கு மயக்கமே போதுமானதாக இருக்கிறது. சிந்திக்கத் தொடங்கினால் காதலர்களிடம் பிணக்குகள் தோன்றுகின்றன. எனவே, அவள் உலகத்தில் நான் விலக்கப்பட்ட கனியையும் பாம்பையும் படைக்க விரும்பவில்லை.)
·
தவறான நினைப்பு
துன்பம் வந்தால்
சிரிப்பேன்!
எதிரே வருகிறாய்
சிரிக்கிறேன்!
நினைத்துக்கொள்வாய்:
தோல்வியை மறந்து
மகிழ்ச்சியாக இருக்கிறானென்று.
· உடைந்துபோன இதயம்!
நாம்
விரல்கள் கோர்த்து
நடந்ததை -
சுட்டுவிரல் மட்டும் கோர்த்து
மணவலம் போகும்போது
நினைத்துப்பார்க்கிறேன்!
உடைந்துபோனது
இதயம்!!
·
நல்லா இரு…
கடைசியாக -
உன்னிடம் சொல்ல
ஒன்றும் இல்லை.
“நல்லா இரு”
· முத்தமிட ஒன்றும் அனுமதி
தேவையில்லை!
முத்தமிட ஒன்றும்
உன் அனுமதி
எனக்குத் தேவையில்லை!
மேல் உதடு நீ
கீழ் உதடு நான்
நாம் என்று உச்சரி
அப்போது தெரியும்
...
... ... ...
·
ஒவ்வொரு முறையும்…
அவசரமாய்
புறப்பட்டுப் போய்விடுகிறாய்!
ஒவ்வொரு முறையும் -
திருமணத்தில்
அவசரப்பட்டதுபோலவே!!
·
உறவு இல்லாமல்…
முதியோர் இல்லமாய்
அழுகிறது.
என் (இளைஞர்கள்) இதயம்
உன் உறவு இல்லாமல்.
·
காதலின் கண்ணீர்
நெடுநாள்
கழித்துப் பார்க்கிறேன்.
உன் அழகை
யார் பிடுங்கிப்போனது
என்று கேட்டால்
அமைதியாகப் பார்க்கிறாள்.
கண்ணில் கண்ணீரோடு
என் கண்களை.
· கவிதைப்
பேசியவளே!
பூங்காவின்
புல் தரையில்
நடந்தால்
புல் உடைந்து
அழுமே என்று
கவிதைப் பேசியவளே!
என் இதயத்தை
சுக்குநூறாக்கிவிட்டு -
இன்று
திரும்பிப்பார்த்து
சிரித்துக்கொண்டு போகிறாயே!
· காதல்
கைக்குட்டை
கண்ணீர் சிந்தும்போது
நீ வாங்கிக் கொடுத்த
கைக்குட்டைதான் துடைக்கிறது
ஆனால்
உன் கையே துடைப்பதாக
நினைத்துக் கொள்கிறேன்
· வாழும் காதல்
மழை வருகிறது
கையில் குடை இருக்கிறது
நனைந்து செல்கிறேன்-
ஒரு மழைக்காலத்தில்-
குடைக்குள் வந்தவள்
காதலியாகிப்போனால்.
“நம் காதலுக்குச் சாட்சியாய்
உனக்கு நானோ
எனக்கு நீயோதான்
குடைபிடிக்க வேண்டும்”
“இல்லையெனில்?”
“நனைந்தேயிருப்போம்” என்றாள்.
அந்த நினைவு-
மின்னலாய் வெட்ட…
மழையோடு கண்ணீரிலும் நனைந்து
பள்ளிக்கூடச் சாலையைக் கடக்க-
அவள்:
குழந்தைக்கு மட்டும் குடைப்பிடித்து
தான் நனைந்தே செல்கிறாள்.