மே 28, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 12

அசையும் இலைகள்
பாம்பு வாயில் தவளை
தாமரையிலிருந்து பறக்கும் வண்டு

அசையும் இலைகள் – எதன் காரணமாகவோ இலை அசைந்துள்ளது. ஆனாலும், அது என்ன இலை என்று முதல் வரியில் தெரியவில்லை.

பாம்பு வாயில் தவளை – சிக்கிவிட்டதா? ம். சிக்கிவிட்டது சென்ற வாரம் தப்பித்த தவளை. இலை அசையும் போதே ஏதோ வருகிறது – ஆபத்து வருகிறது என்று தண்ணீரில் குதித்து தப்பித்திருக்க வேண்டும். ஆனால் தப்பிக்கவில்லை – தவளைக்கு உணவு உண்ட மயக்கமாகக்கூட இருக்கலாம். எது எப்படியோ சிக்கிவிட்டது.

சரி… ஹைக்கூவில் மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாகவும் அதிர்ச்சியாகவும் முதல் இரண்டு அடியிலிருந்து விலகியும் இருக்க வேண்டும் என்கிறார்களே! – சரி மூன்றாவது அடிக்குத்தான் போய் பார்ப்போம்.

தாமரையிலிருந்து பறக்கும் வண்டு – இப்போது தெரிந்துவிடுகிறது – என்ன தெரிகிறது? முதல் அடியில் அசைந்த இலைகள் – தாமரை இலைகள் என்பதும் தாமரை இலையின் மீதுதான் அந்தத் தவளை இருந்திருக்கிறது என்பதும் தாமரையிலிருந்து என்பதால் தெரிகிறது.

அப்போது மூன்றாவது அடியில் இருக்கும் “பறக்கும் வண்டு”. ஆமாம். தாமரையில் தேன் எடுத்துக்கொண்டிருந்த வண்டு பாம்பு தவளையை விழுங்கியதால் – தாமரை அசைந்ததால் – பயந்தோ – பயப்படாமலோ பாதியிலேயே பறந்துவிட்டது!

ஏன் பாதியில்தான் பறந்திருக்குமா என்ன? தேன் முழுவதையும் அருந்தி விட்டு பறந்து செல்லலாம் என்றுகூட எண்ணி  பறந்திருக்கலாம். அப்போது பாம்பு தவளையை விழுங்கியது எதேச்சையாக நடந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். – நீங்கள் வேறு நினைக்கலாம். அவ்வாறு நினைத்ததை நீங்கள் ஹைக்கூவாக எழுதலாம்.


(சரி – சென்ற வாரம் தப்பித்த தவளை இந்த வாரம் சிக்கிக்கொண்டது. இந்த வாரம் பறந்த வண்டு? அடுத்த வாரம் சிக்கிக் கொள்ளுமா என்று எதிர் பார்க்கிறோம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது – ஆளை விடுங்கப்பா! இந்த விளையாட்டுக்கு நான் வரல!!)

மே 24, 2014

கடவுள் - ஸ்டேட் பஸ்ட்! டாக்டராகி இலவச சேவை!!!

ஆணாகப் பிறந்தால்
நன்றாகப் படிக்கமுடியாது என்றெண்ணி
பெண்ணாகப் பிறக்க நினைத்து
பெண்ணாகப் பிறப்பது பாவமென்று எண்ணி!
ஆணாகப் பிறந்தார் கடவுள்!
அரசு பள்ளியில் சேர மறுத்து
தனியார் பள்ளியில் சேர்ந்தார்.
ப்ரி கேஜியிலிருந்தே
விழுந்துவிழுந்து படிக்கத் தொடங்கினார்.
பத்தாவதில்
ஸ்டேட் பஸ்ட்498/500 எடுத்தார்!
தனியார் பள்ளிக்கூடம் கல்விக்கட்டணமின்றி
இலவசமாகச் சேர்த்துக்கொண்டது!
பன்னிரண்டாவதில் நீங்கள் நினைப்பதுபோலவே
ஸ்டேட் பஸ்ட்1196/1200 எடுத்தார்!
மீடியாக்கள் சூழ்ந்துகொண்டன!
பேட்டி கொடுத்தார்இலவச மருத்துவம் என்றார்
தொலைக்காட்சியைப் பார்த்த மக்கள்
மெய்ச்சிலிர்த்துப்போயினர்இலவச மருத்துவமாம்.
கவர்ன்மென்ட்டில் ஈஸியாக சீட்  கிடைத்தது!
முதலாமாண்டும் கவனமுடன் படித்தார்!
இரண்டாமாண்டில் விழுந்தார் காதலில்!!
மூன்று, நான்கு என்று கடந்து
பிரைவேட் மருத்துவமைனையில்
மருத்துவராகிவிட்டார்.
கிராமப்புறத்தில் ஓராண்டு மருத்துவம் பார்க்க
முடியாது என் போராட்டத்திற்கு
தலைமை வகித்தார்!
தனியார் மருத்துவமனை என்பதால்
உன்னால் இவ்வளவு வருமானம்
வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்!
தேவையில்லாத எல்லாவற்றுக்கும்
ஸ்கேன், டெஸ்ட், மருந்து, மாத்திரையென்று
எழுதி கொடுத்தார்!
அந்த இலவச சேவை என்ற வார்த்தையை
மறந்தே போனார்!
காதலி வீட்டில் வரதட்சணையாக
மருத்துவமனையே கட்டி
கல்யாணம் செய்து வைத்தார்கள்.
கடவுள் மருத்துவமனையில்
கடவுள் ஷீப் டாக்டராக அமர்ந்தார்.
போட்ட பணத்தை எடுக்கவேண்டுமென்று
எல்லா மருத்துவமனைகள் போலவே
கடவுள் மருத்துவமனையும் மாறிப்போனது.
மனைவியோடு செய்தி பார்க்க
விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டனர்!
ஸ்டேட் பஸ்ட் மாணவன் சொன்னான்:
டாக்டராகி இலவச சேவை…”

மே 23, 2014

பதவி பறிப்பு

பதவி ஏற்பு
படிக்கும் கண்ணுக்குத் தெரிவதோ
பதவி பறிப்பு


மே 21, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 11

தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ

கிராமத்தில் இருப்பவர்கள் மேற்கண்ட நிகழ்வை பார்த்திருக்கலாம். நான் பார்த்திருக்கிறேன்.  இப்போது நான் கிராமத்தில் இல்லை. கிராமத்து நினைவுகள் இருக்கிறதுகிராமத்திற்கும்  அவ்வவப்போது சென்று வருகிறேன். நண்பர்களோடு குளக்கரையில் அமர்ந்து பேசுவது இன்றும் தொடர்கிறது.

அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் ஒரு நாள் தண்ணீர் பாம்பு கரையில் இருப்பதைக் கண்டு நண்பன் கல்லை எடுத்து பாம்பை அடிக்க முனைந்தான். நண்பர்கள் தடுத்தி நிறுத்தி பாம்பு எங்கே போகிறது என்று பார்க்கலாம் என கூறினோம். பாம்பு கரையிலேயே இருந்தது. அப்போது தவளை ஒன்று கரையை நோக்கி வந்தது ஒரு துணி துவைக்கும் கல்லின் அருகில் எட்டிப்பார்த்தது.

இதைக்கண்ட தண்ணீர் பாம்பு இரைக்காக அதனை கவ்வ நினைத்திருக்கலாம். நண்பனோ எதேச்சையாகக் கையில் வைத்திருந்த கல்லை குளத்தில் எறிந்தான். அப்போது பாம்பும் குதித்தது. தவளையும் நீரில் மூழ்கிப்போனது. பாம்பிடமிருந்து தப்பித்தது தவளை. அந்த நிகழ்வை இன்று ஹைக்கூவாக மாற்றியிருக்கிறேன்.

உணவுச் சங்கிலியின் விதிப்படி பாம்பு தவளையை உணவாக உட்கொள்வது தவிர்க்கமுடியாதது. அதைத் தடுக்க என் நண்பன் கல் எரிந்திருந்தான் என்றால் பாம்புக்கான உணவை நாங்கள் தந்திருக்க முடியாது. தடுத்திருந்தால் மனித நேயம் ஆகியிருக்குமே தவளையை காப்பாற்றியிருக்கலாமே என்று நீங்கள் நினைத்தால் அது சென்ரியூ கவிதையாகிவிடும். நண்பன் கல் எறிந்தது எதேச்சையானது அதை கவிதைக்குள் கொண்டு வந்துதான் கீழே உள்ளவாறு ஹைக்கூவை எழுதினேன்.

தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
எறிந்த கல்

எறிந்த கல் – ஹைக்கூவுக்குள் சரியாகப் பொருந்தவில்லை. பின்னர் திருத்திய வடிவம்தான் இது.

தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ

மேலே உள்ளதை இன்னும் திருத்த வேண்டும் சுருக்க வேண்டும். எப்படி என்று பார்ப்போம்.
நண்பன் கல் எரிந்தால் அது சென்ரியூ என்று குறிப்பிட்டேன். ஆனால் அந்த கவிதையை சென்ரியூவாக்க விரும்பவில்லை. ஹைக்கூவாக எழுத முனைய துணிந்தேன். இப்படி:
அதே நிகழ்வு அதே பாம்பு அதே தவளை நண்பனை மாற்றிவிட்டேன். குளத்தின் கரையில் பல செடிகள், மரங்கள் இருக்கும். அதிலிருந்து ஏதேனும் ஒன்று கல்லுக்குப் பதிலாக விழுவதாக மாற்றிவிட்டேன். இலை, காய், பழம் இந்த வரிசையில் அலரிப் பூ என்று எழுதினேன்.

தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ

இரண்டாவது, மூன்றாவது அடியில் குளம் என்ற சொல் இடம்பெறுகிறது. எனவே இதைச் சுருக்க வேண்டும்.

தவளையைக் கவ்வ
தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ

என்று சுருக்கிவிட்டேன். அலரிப்பூவை தேர்ந்தெடுத்ததில் சிக்கல் இருப்பதாக நினைத்தேன். அதில் என்ன சிக்கல் என்கிறீர்களா? இருக்கிறது. அலரிப்பூ இறைவனுக்குச் சூட பயன்படுத்துவார்கள். சரி அந்தப் பூ உதிர்வது இறைவனே பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்றிவிட்டான் என்று உயர்வாக நீங்கள் எண்ணலாம். ஆனால், அது எனக்குப் பிடிக்கவில்லை. இறைவன் தானே உலக உயிர்களைப் படைத்து எது எது எதை எதை உண்ணலாம் என்றும் குறித்திருப்பான். அதனால் மாற்ற நினைத்தேன்.

மேலும், அலரிப்பூ என்பது எப்போதாவது ஒரு முறைதான் விழும். அதனாலும், அதை மாற்ற நினைத்தேன். ஆலம்பழம் என்று மாற்றலாம் என்று எண்ணினேன். ஆமாம் ஆலம்பழம் சிறப்பாகப் பொருந்தி வருகிறது. எப்படிப் பொருந்துகிறது என்று நீங்களே பாருங்களேன்.

அலரிப்பூ குளத்தில் விழுந்தால் ஒரு முறைதான் பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்ற முடியும். அடிக்கடிக் காப்பது யார்? ஆலம் மரத்தில் பழம் பழுத்தால் அதை உண்ண பல பறவைகள் வரும். அதனால் பழம் அடிக்கடி கீழே விழும். அதனால் அடிக்கடி தவளை பாம்பிடமிருந்து தப்பிக்க வழி இருக்கிறது. இப்போது ஹைக்கூ, ஹைக்கூவாக இருக்கிறது. இப்படி:

தவளையைக் கவ்வ
தயாராய் பாம்பு
குளத்தில் விழும் ஆலம்பழம்


எல்லாம் சரிஒரு ஹைக்கூ எழுதும்போது இத எல்லாத்தையுமா பாத்து எழுதுவாங்க சிந்திப்பாங்க. சரிபாவம் அந்தத் தவளைக்கு உணவு கொடுப்பது யார்? சிந்தியுங்கள் நீங்களும் ஹைக்கூ எழுதலாம். எழுதுங்கள்என் ஆசையும் நீங்கள் எழுத வேண்டும் என்பதுதான்… (அடுத்த வாரம் இதே எங்க ஊர் குளத்தொடும் தவளையோடும் ஆனால் பாம்பு தவளையை உண்ணும்படி ஒரு ஹைக்கூவோடு ஹைக்கூ எழுதலாம் வாங்க தொடரில் சந்திக்கிறேன். அடுத்த வாரத்துக்கு இப்பவே எழுதி வைச்சுட்டேன்!)